செய்திகள்,கதைகள், விமர்சனங்கள்

Ep – 7 உன் பாத கொலுசாய்

4,251

உன் பாத கொலுசாய்…
EPISODE – 7
Written by
Saipriya.A


அன்று…

காலேஜில் புது மாணவர்களை வரவேற்கும் விதமாக ஃப்ரஷர்ஸ் டே நடந்துகொண்டிருந்தது…
அது ராகிங் ஃப்ரீ கேம்பஸ் என்பதால் சீனியர் மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து முதல் வருடம் சேரும் மாணவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்…

தியா பவிக்கு கால் செய்தாள், “எங்கடி இருக்க…? மெயின் கேம்பஸ் கிட்ட தான் நானும் நிக்கிறேன்…”

பவி தியாவுக்கு பின்னால் வந்து, “பூ…!” என்று கத்த…

“பைத்தியம்… இன்னமும் சின்ன புள்ளனு நெனப்பு… காலேஜ் வந்துட்டோம்…” என்று பவியின் காதை பிடித்து தியா திருக…

“ஐயோ… சாரி தியா… இனிமே பண்ண மாட்டேன்… உனக்கு பகல்ல கூட பேய்னா பயம்ல…? மறந்துட்டேன்…” என்று சொல்லி பவி சிரித்தாள்.

தியா, பவி… இருவரும் பள்ளியிலிருந்தே ஒன்றாக படித்து வருபவர்கள்… தியா 11த்தில் கம்ப்யூட்டர் க்ரூப் எடுத்ததினால் அடம்பிடித்து, பவியும் கம்ப்யூட்டர் குரூப் எடுத்தாள்… இப்போது தன் இணை பிரியா தோழி ECE எடுப்பதால் அவளும் அதே கல்லூரியில் ECE சேர்ந்திருக்கிறாள்…

கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் உரைகளை வழங்கி முடித்ததும் மாணவர்களை தத்தம் வகுப்பறைகளுக்கு செல்லுமாறு கூறினர்… முதல் வருட மாணவர்களுக்கு தனி பில்டிங்கில் வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன…

பவி, தியா இருவரும் ECE-க்கான வகுப்பறைக்கு சென்று முதல் பென்ச்சில் அமர்ந்தனர்…

“தியா… எல்லாரும் வந்ததுக்கப்புறம் கிளாஸ்குள்ள வர்லாம்… அதுவரைக்கும் வரண்டா-ல நிக்கலாமா…?” என்று பவி கூற…
“சரி…” என்று தியா கிளாஸை விட்டு வெளியில் வந்தாள்.

வரண்டாவில் வந்து நின்ற பவி, நேர் எதிரில் இருந்த சிவில் டிபார்ட்மெண்ட்டின் கிளாஸ் ரூம் வாசலில் இரண்டு மாணவர்கள் நிற்பதைப் பார்த்து, “ஹே தியா… இங்க பாரு… சிவில் டிபார்ட்மெண்ட் கிளாஸ் ரூம் நமக்கு அப்படியே ஆப்போசிட்ல இருக்கு…” என்று பவி கூற…

தியா அவளை முறைத்தாள்…
“இதுக்கு தான் வரண்டா-ல நிக்கலாம்னு சொன்னியா…?” என்று கேட்ட தியா, சட்டென கிளாஸ் ரூமிற்கு வந்து விட்டாள்…

“தினேஷ்… அங்க பாரேன்… அந்த பொண்ணு ரொம்ப க்யூட்டா இருக்கால்ல…??” என்று சூர்யா கேட்க…

“எந்த பொண்ணு மச்சி…?” என்று தினேஷ் கேட்டுவிட்டு எட்டிப்பார்க்க…

“சே… அந்த பொண்ணு கிளாஸ்குள்ள போய்டுச்சிடா…” என்று நெற்றியில் குத்திக்கொண்டான் சூர்யா…

“விட்றா மச்சான்… பிரேக்ல எப்படியும் வெளியில வருவால்ல… அப்போ பார்த்துக்கலாம்… சில் ப்ரோ…” என்று சொன்ன தினேஷ், “ஆனால் அந்த பொண்ண பார்த்தா… எனக்கும் காட்டணும்… டீலா…?” என்று சூர்யாவிடம் கேட்க…

“எதுக்கு…?” என்று சூர்யா புருவங்களை உயர்த்த…

“இல்லடா… அந்த க்யூட் பொண்ணு கூட வேற ஏதாச்சும் கொஞ்சம் கியூட் பொண்ணு இருக்கும்ல…? அத நான் பாப்பேன்… அதுக்கு தான்…” என்று தினேஷ் சொல்ல…

“ஹையோ…” என்று சூர்யா தலையில் அடித்துக் கொண்டான்.

வகுப்பறையில் லெக்சரர் உள்ளே நுழைய எல்லோரும் எழுந்து விஷ் செய்தனர்.
“ஓகே ஸ்டுடெண்ட்ஸ், சிட் டவுன்… இதே மரியாதை ஃபைனல் இயர் முடிச்சு காலேஜ் விட்டு போற வரைக்கும் இருக்கட்டும்…” என்று அவர் கூற…

“பரவால்லையே… சார் ரொம்ப நல்லா பேசுறாரு இல்ல…?” என்று மாணவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க…

“இன்னிக்கி ஃபர்ஸ்ட் க்ளாஸ்-ன்றதால சும்மா இன்ட்ரொடக்ஷ்ன் மட்டும்தான்… ஒவ்வொருத்தரா இன்ட்ரொட்யூஸ் பண்ணிக்கோங்க…” என்று லெக்சரர் சொன்னதும், எல்லோரும் அவரவர் பற்றி கூறி முடிக்க அதற்குள் பெல்லும் அடித்துவிட…

“சரி கைஸ்… நாளைக்கு கிளாஸ்ல பார்க்கலாம்…” என்று லெக்சரர் கிளம்ப, ஸ்டுடெண்ட்ஸும் கேண்டீன் பக்கம் செல்ல ஆரம்பித்தனர்.

சூர்யா வராண்டாவில் நின்றபடி தியாவை கண்களால் தேடிக்கொண்டே இருந்தான்.

“கூட்டத்தில ஒண்ணுமே தெரியல… சே…” என்று சூர்யா கடுப்பாக…

“ஒருவேளை… கேன்டீன் போய் இருப்பாளோ என்னவோ…? நாம ஏன் அங்க போய் ஏதாச்சும் சாப்பிட்டுட்டே தேட கூடாது…??” என்று தினேஷ் கேட்க…

“அது சரி… வா போலாம்…” என்று கேன்டீனுக்கு சென்று அமர்ந்தான் சூர்யா…

அங்கும் அவள் எங்கேயும் தென்படாமல் போகவே, “கிளாஸுக்கே திரும்ப போகலாம்…” என்று எழுந்தவன் அப்போதுதான் கேன்டீனிற்குள் நுழைந்த தியாவை பார்த்தான்.

பவியிடம் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டே தியா, சூர்யாவை கடந்து செல்ல… சூர்யா அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்…

தியா அவர்களுக்கு எதிர் டேபிளில் அமர்ந்து காபி பருக ஆரம்பிக்க… சூர்யா கன்னத்தில் கைவைத்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்…

“யாரைப் பார்க்கிறான், இந்த பையன்…?” என்று பவி தியாவிடம் கேட்க…

“எந்த பையன் டி…?” என்று பதிலுக்கு நிமிர்ந்தும் பாராமல் தியா கேட்டாள்.

“அதோ ஆப்போசிட்ல பிளாக் ஷர்ட்ல ஒரு பையன்… இந்த பக்கம் தான் பார்க்கிறான்… ஆனா யார பார்க்கிறான்னு தான் தெரியல…” என்று பவி கூற…

“ஏன்டி…! அவனுக்கு என்ன ஒன்றை கண்ணா…? இல்ல உனக்கு கண்ணு தெரியலையா…? வேணும்னா, நீ ஹாய் காட்டு… அவன் பதிலுக்கு வேவ் பண்ணா உன்ன பாக்குறானான்னு தெரிஞ்சுடும் இல்ல…!” என்று தியா சொல்ல…

அவள் சொல்லி முடிப்பதற்குள், பவி அவனை நோக்கி ‘ஹாய்’ என்று கை அசைக்க, தியா சட்டென அவள் கைகளை பிடித்து கீழே இறக்கினாள்.

“ஏன்டி லூசு… நான் விளையாட்டுக்கு சொன்னா… நிஜமாவே பண்றியே…?
சும்மா இருக்க மாட்ட…? அப்புறம் உன்ன இங்கேயே விட்டுட்டு போய்டுவேன்… நீ எல்லார்கிட்டயும் பேசிட்டு வா…” என்று தியா பெரிய,

“ஐயோ நான் இல்லப்பா… நான் உன்கூடவே வர்றேன்…” என்ற பவி திருதிருவென்று விழித்தாள். ஏனென்றால் தியாவின் கோபத்தைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும்.

தியா எழுந்து கேன்டீனை விட்டுச்செல்ல, பின்னாலேயே பவியும் ஓடினாள். சூர்யாவும் தியாவை பார்த்துக்கொண்டே அவள் பின்னே செல்ல…

கொஞ்ச நேரம் சென்று, “போலாமா டா…” என்று தினேஷ் கேட்க… பதில் வராமல் போகவே நிமிர்ந்தவன், சூர்யாவை காணாமல், “அடப்பாவி… தனியா பேச வச்சிட்டு போயிட்டானே…” என்று எழுந்து கிளாஸ் ரூமுக்கு சென்றான்…

எதிர்பார்த்த மாதிரியே, சூர்யா கிளாஸ் ரூமுக்கு வெளியில் இருக்கும் ஒரு தூணில் சாய்ந்து நின்று சிரித்துக்கொண்டிருக்க…

“யாரைப் பார்த்து சிரிக்கிறான் இவன்…? டேய், என்ன விட்டுட்டு தனியா கமிட்டாக வந்துட்டியா…?? விடக்கூடாது…!” என்று நினைத்த தினேஷ், குரலை மாற்றிக் கொண்டு, “ஹே… யூ… வாட் ஆர் யூ டூயிங் ஹியர்…? கோ இன்சைட் த கிளாஸ்…” என்றான்.

“ஏ போடா…” என்று சூர்யா கூற…

“மச்சி… கஷ்டப்பட்டு மிமிக்ரி பண்ணியும்… நான்தான்னு உடனே கண்டுபிடிச்சா, எனக்கு என்னடா மரியாதை…??” என்றான் தினேஷ்.

“பத்து வருஷத்துக்கு மேல, இந்த வாய்ஸ தான் கேட்கிறேன்…? உன் வாய்ஸ் தெரியாதா…? சரி… என்ன டிஸ்டர்ப் பண்ணாத… அப்புறம் வா… ஐயா இப்போ பிசி…” என்ற சூர்யா மறுபடி தூணுக்கு பின்னால் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருக்க…

“என்னதான் பண்ற அப்டி பிசியா… சொல்லு மச்சான்…” என்று தினேஷ் சூர்யாவிடம் கேட்க…

அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே, “நானும் பார்க்கிறேன்…” என்று தினேஷும் சூர்யாவின் பார்வை சென்ற இடத்தை ஃபாலோ செய்ய…

தியா பவியுடன் நிற்பதை பார்த்தவன், “வாவ்… இதுதான் நீ சொன்ன க்யூட் கேர்ளா…? செம க்யூட்டா இருக்கா டா…! டேய்… பார்க்கும்போது எனக்கும் காட்டணும்னு டீல் போட்டேன்ல டா…? துரோகி…!!” என்று தினேஷ் கேட்க…

“சொல்ற அளவுக்கு, என்ட டைம் இல்ல…! சாரி மச்சான்…!!” என்று சூர்யா சொல்ல…

“டேய்… இது உனக்கே நியாயமா…? நானும் எப்போல இருந்து கமிட்டாக ட்ரை பண்றேன்… எல்லா பொண்ணும் உன்ட தான் வந்து ப்ரபோஸ் பண்றாளுங்களே தவிர, என்ன ஒருத்தி பாக்கமாட்றா…!! அப்படி உன்கிட்ட பேசற ஒரு பொண்ணுகிட்டயாச்சும் என்ன இன்ட்ரோ குடுத்துருக்கியா…?? ம்ஹும்… நீ நடத்து மச்சான்… நா சிங்கிளாவே இருக்கிறேன்…” என்று தினேஷ் எமோஷனலாக சொல்ல…

அவனை திரும்பி பார்த்த சூர்யா, “டேய்… டேய்… நடிக்காதடா…” என்று சிரிக்க ஆரம்பித்தான்…

“இவன்ட என் ராஜ தந்திரங்கள் எதுவும் பலிக்காது போலயே… சரி மச்சான்… உன்ன டிஸ்டர்ப் பண்ணாம இப்படி நின்னுக்கிறேன்…” என்றான் தினேஷ்.

“தியா… அங்க பாரேன்… அந்தப் பையன் இங்கேயே வந்துட்டான்…” என்று பவி சொல்ல…

நிமிர்ந்த தியா, தூணில் பின்னாலிருந்து வெளிப்பட்ட சூர்யாவை பார்க்க…
சூர்யாவின் கண்கள் தியாவின் கண்களை ஒரு நொடி சந்திக்க, சூர்யாவின் இதயம் வேகமெடுத்தது…

சுற்றி நடப்பது எல்லாம் ஸ்லோமோஷனில் தெரிய…
தியா தன் பார்வையை மீண்டும் திருப்பிக்கொண்டாள்.

சூர்யாவின் கண்வழியாக தியா அப்போதே அவன் இதயத்தில் நுழைந்து இருந்தாள்…


கொலுசு ஒலிக்கும்…


Comments

0 comments

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy